Friday, 7 February 2014

கம்ப்யூட்டர் வர்த்தகத்தை கைவிடுகிறது சோனி நிறுவனம்

 

டோக்கியோ: ஆண்டுக்கு 6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால், கம்ப்யூட்டர் வர்த்தகத்தை கைவிடுவதோடு 5,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சோனி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சோனி நிறுவன தயாரிப்புகளான பிராவியா டிவி, வீடியோ கேம்ஸ், பிளே ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை உலகம் முழுவதும் மக்கள் ஆவலுடன் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தென் கொரிய தயாரிப்பான சாம்சங் போன்றவைகள் உலக சந்தைக்கு பெருமளவுக்கு வந்ததைத் தொடர்ந்து சோனி நிறுவனத் தயாரிப்பான கம்ப்யூட்டர் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சோனி நிறுவனத்துக்க கடந்த ஆண்டு மட்டும் ரூ.6,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் தயாரிப்பு உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சோனியின் கம்ப்யூட்டர் தயாரிப்பை ஜப்பானை சேர்ந்த ஜேஐபி நிறுவனத்துக்கு கணிசமான விலைக்கு விற்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பானை சேர்ந்த 1,500 பேர், மற்ற நாடுகளில் உள்ள 3,500 பேர் உள்பட 5,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

இவர்களை சோனி நிறுவனத்தின் கம்யூட்டர் தயாரிப்பு பிரிவை வாங்கும் புதிய நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அவர்களை சோனி நிறுவனத்தின் மற்ற தயாரிப்பு பிரிவுகளில் பணியமர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.சோனி நிறுவனத்தின் செல்போன் மற்றும் வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட வர்த்தகத்தை பெருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தவும் பணியார்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment